Thursday 1 August 2019

உலக தாய்ப்பால் வாரம்

 உலகம் முழுவதும் மகப்பேறு மருத்துவர்களால் இந்த வாரத்தில் தோராயமாக 540 விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்,நடத்தப்படுகின்றன. தனியார் தொண்டு நிறுவனங்கள், அரசு சார்பிலும் விழாக்கள் நடைபெறுகின்றன.

சர்வதேச அமைப்புகளான உலக சுகாதார அமைப்பு, குழந்தைகள் நல அமைப்பு ஆகியவை இந்த வாரத்தில் விழிப்புணர்வு பேரணி, பிரச்சாரங்கள் நடத்தி வருகின்றன.

1992ஆம் ஆண்டு ’வேர்ல்டு அலையன்ஸ் பிரஸ்ட் ஃபீடிங் ஆக்‌ஷன்’ (வாபா) அமைப்பால் முதல் முறையாக தாய்ப்பால் வாரம் கொண்டாடப்பட்டது.





ஒவ்வொரு ஆண்டும் இந்த வாரத்திற்கென ஒரு தீம் தேர்வு செய்யப்படும். உதாரணமாக கடந்த ஆண்டு ”தாய்மார்களுக்கு தாய்ப்பால் கொடுப்பதால் ஏற்படும் நோய் எதிர்ப்பு சக்தி” என்ற தீம் உருவாக்கப்பட்டது. அதேபோல் இந்த ஆண்டும் ஒரு தீம் உருவாக்கப்பட்டு, அதுகுறித்து பிரச்சாரங்கள் நடைபெறும்.

தாய்ப்பால் கொடுப்பதை ஊக்குவிக்கவே இந்த வாரம் ஆண்டுதோறும் அனுசரிக்கப்படுகிறது. அரசு அலுவலகங்களில் விளையாட்டுப் போட்டிகளும் நடத்தப்படுகின்றன. அதிகமாக தாய்ப்பால் குடித்து கொழுக் மொழுக் என்று இருக்கும் 6 மாத குழந்தைக்கு பரிசுகள் வழங்கி ஊக்குவிக்கப்படுகிறது.



தாய்ப்பால் குறித்த சில சுவாரஸ்ய தகவல்கள்:

குழந்தை பிறந்த உடன் சுரக்கும் தாய்ப்பால் மஞ்சள் நிறத்தில் இருக்கும். இதில் குழந்தையின் உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் உள்ளது.

குழந்தை பெற்றெடுத்த ஆரோக்கியமான பெண்ணுக்கு தினமும் 850 மில்லி அளவு பால் சுரக்கும். இதனால் பெண்ணின் உடல் கூடுதலாக 600 கலோரிகள் செலவழியும். அதனால் தான் ஊட்டச்சத்து மிக்க உணவுகளை மட்டுமே சாப்பிட வேண்டும்.

ஆறு மாதங்களாவது குழந்தைகளுக்குப் பாலூட்டுவதால் நுண்ணறிவுத் திறனும் நோய் எதிர்ப்பு சக்தியும் கிடைக்கிறது. குழந்தைக்கு அடிப்படை ஊட்டச்சத்துக்கள் கிடைக்கின்றன.

தாய்ப்பால் கொடுப்பது குறித்து சில போலி நம்பிக்கைகள் உண்டு . அதில் மார்பக அளவை வைத்து தாய்ப்பால் சுரப்பை கணிப்பார்கள். ஆனால் அது முற்றிலும் தவறானது

தாய்ப்பால் கொடுப்பது குறித்த மூட நம்பிக்கைகள்:

தாய்ப்பால் ஊட்டும் பெண்களின் மார்பக அளவுக்கும், தாய்ப்பால் சுரப்புக்கும் சம்பந்தமே இல்லை. சில பெண்களுக்கு மார்பகம் பெரியதாக இருக்கும். ஆனால், தாய்ப்பால் சுரப்பு குறைவாக இருக்கும். இன்னும் சிலருக்கு மார்பகம் சிறியதாக இருக்கும். அதேநேரம் தாய்ப்பால் அதிகமாக சுரக்கும்.

மார்பகத்தில் உள்ள திசு சுரப்பிகளின் எண்ணிக்கையையும், அவை தூண்டப்படும் விதத்தையும் பொறுத்துதான் ஒரு பெண்ணுக்கு எந்த அளவுக்கு தாய்ப்பால் சுரக்கும் என்பதை தெரிந்து கொள்ள முடியும்.

குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்க வேண்டும் என்கிற ஆர்வம் கூட ஒரு பெண்ணின் தாய்ப்பால் சுரப்பு திசுக்களை தூண்டிவிடும். எனவே தாய்ப்பால் கொடுக்கும் காலத்தில், அதுகுறித்து பாலூட்டும் தாய் சிந்தித்துக்கொண்டே இருக்க வேண்டுமாம்.

Leia Mais…