Tuesday 24 January 2012

புரதம் உடலுக்கு தேவை...

நமது உடலுக்கு ஒரு கிலோகிராம் எடைக்கு ஒரு நாளைக்குத் தேவைப்படும் புரதத்தின் அளவு 0.8 கிராம்கள். இது ஆரோக்கியமான அமெரிக்கர்களை வைத்துச் செய்யப்பட்ட ஆய்வின் முடிவு.

வளரும் குழந்தைகள், பாலூட்டும் தாய்மார்கள், நோயாளிகளுக்கு என்றால், இந்த அளவை விட கூடுதலாக புரதம் தேவைப்படும்.


உடலின் ஒரு கிலோகிராம் எடைக்கு 2 கிராம் என்னும் அளவை விட புரதத்தின் அளவு அதிகரித்தால், அதைச் சுத்திகரிக்க சிறுநீரகங்கள் அதிகம் சிரமப்பட நேரிடும். உடலில் அதிகமாக உள்ள புரதம் ரியாவாக மாறி, சிறுநீருடன் வெளியேறும்போது உடலில் உள்ள கால்சியமும் சேர்ந்து வெளியேறி விடுகிறது.

இது எலும்புகளுக்குக் கெடுதல்களை உண்டாக்கி, காலப்போக்கில் `ஆஸ்டிரியோ போறோசிஸ்' என்ற நோயையும் உண்டாக்கி விடுகிறது. அளவுக்கு மீறினால், புரதமும் நஞ்சுதான்.

Leia Mais…

நடைப்பயிற்சி ..... வாங்க..!

நடைப்பயிற்சி ஓர் அற்புதமான பயிற்சியாகும். இது இரத்த அழுத்தத்தை குறைப்பதோடு, இரத்தத்தில் உள்ள தீய கொழுப்புச் சத்தின் (Low-density lipoprotein – LDL) அளவைக் குறைத்து, நரம்புகளுக்குப் புத்துணர்வு தந்து, எலும்புகளையும் உறுதியாக்குகிறது.

எடையை குறைக்க விரும்புபவர்களுக்கும், உடலுக்கு வலுவான கட்டமைப்பு அளித்து ஆரோக்கியமானதாக இருக்க விரும்புபவர்களுக்கும் நடைப் பயிற்சி ஓர் எளிய உடற்பயிற்சியாக உள்ளது.

வேகமாக நடத்தல் எனும் பயிற்சியை மேற்கொள்பவர்களுக்கு மாரடைப்பு மற்றும் இதர இதயநோய்களின் தாக்குதல்கள் இப்பயிற்சியை மேற்கொள்ளாதவர்களோடு ஒப்பிடுகையில் பாதிக்கும் மேலாக குறைவாக உள்ளது என்று சமீபத்திய ஆராய்ச்சிகளில் கண்டறியப்பட்டுள்ளது.

நீங்கள் வேலைக்கு செல்லும் பயணத்தில் அதிகமாக நடக்க முனையுங்கள், இரயிலுக்கோ பேருந்துக்கோ நடந்து செல்லுங்கள் , உங்கள் வாகனங்களை அலுவலகத்திலிருந்து சற்று தொலைவில் நிறுத்தி வைத்து நடந்து செல்லுங்கள். கடைகளுக்கு நடந்து செல்லுங்கள்., நீங்களும் உங்கள் குடும்பத்தினரும் தூய்மையான காற்று வீசும் பகுதிகளில் நீண்ட நடை பயணம் சென்று மகிழுங்கள்.

1. நெஞ்சை நிமிர்த்தி முன்னோக்கிப் பார்த்தவராக (தரையை பார்க்காமல்) இருபது அடி முன்னோக்கியவாறு நடங்கள்.

2. நெஞ்சை உயர்த்தியவாறு தோள்களைச் சாதாரணமாகவும் கைகளைத் தளர்வாகவும் வைத்திருங்கள்.

3. கைகளை முன்னும் பின்னும் ஒரே சீராக ஆட்டியவாறு (பக்கவாட்டில் ஆட்டாமல்), அதேவேளை நெஞ்சுப் பகுதியை விட உயர்த்திவிடாமல் நடந்து செல்லுங்கள். அதற்கேற்றவாறு உங்கள் கால்களும் பின் தொடரும்..

4. உங்கள் அடிவயிற்றை கெட்டியாகவும் உறுதியாகவும் வைத்த நிலையில் முதுகை சமமாக நிமிர்த்தியவாறு உடலைச் சற்றே முன்புறம் சாய்த்தவாறு நடங்கள்.

5. ஒரு நேர்கோட்டில் நடப்பதை போல் பாவனை செய்யுங்கள். அடிகளை சற்று அதிகமாக எட்டி வைத்து நடப்பதைக் கட்டுப்படுத்துங்கள். வேகமாக செல்ல வேண்டுமானால், காலடிகளை அருகருகே வைத்து விரைவாக நடங்கள்.

6. நடக்க காலை உயர்த்தும் போது உங்கள் முன்னங்கால் விரல்களால் உடலை உந்தித் தள்ளியவாறும், காலை பூமியில் வைக்கும் போது குதிகாலை பூமியில் முதலில் பதிய வைத்தவாறும் இதே சுழற்சியாக முன்னங்கால் விரல்களையும் இயற்கையான ஸ்ப்ரிங் போன்ற நரம்புகளின் உதவியால் உடலை முன்னோக்கி செலுத்துங்கள்.

7. இயல்பாக சுவாசியுங்கள். நடக்கும் போது ஆழமாக ஒரே சீரான வேகத்தில் சுவாசித்து உயிர்வளி (Oxygen) அதிகமான அளவில் உட்செலுத்திக்கொள்ளுங்கள். நடக்கும் போது வேகமாகவும் அதே நேரத்தில் மூச்சிறைக்கும் அளவிற்கு இல்லாமலும் பார்த்துக் கொள்ளுங்கள்.

Leia Mais…

Friday 13 January 2012

பொங்கல் வாழ்த்துக்கள்...

அன்பு தோழிகளுக்கு... 
இனிய தைத்திருநாள் வாழ்த்துக்கள்...!!!

Leia Mais…

Thursday 12 January 2012

பதின் வயதினருக்கானது ….


முழுக்க முழுக்க பதின் வயதினரை மட்டும் வைத்து நிகழ்த்தப்பட்ட ஆய்வு முடிவு ஒன்று இன்றைய பதின் வயதினரை ஒழுங்காகத் தூங்குங்கள் என எச்சரிக்கிறது
தூங்காதே தம்பி தூங்காதே என பாடியதெல்லாம் பழைய கதை. இப்போது இளைஞர்களையும், பதின் வயதினரையும் பார்த்து தூங்குங்கள், தூங்குங்கள் என துரத்தும் காலம். அவர்களைத் தூங்காமல் இருக்க வைப்பதற்காக ஊடகங்கள் பயனற்ற அரைகுறைக் கலாச்சார நிகழ்ச்சிகளை நிதமும் அரங்கேற்றிக் கொண்டே இருக்கின்றன.
நள்ளிரவுக்கு மேலும் விழித்திருந்து தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்ப்பதும், கணினியில் விளையாடுவதும், செல்போனில் அளவளாவுவதும் என இன்றைய இளசுகளுக்கு தூக்கத்தைத் தவிர்க்கும் வழிகள் ஏராளமாய் இருக்கின்றன.
இவையெல்லாம் உடல்நலத்துக்கு பெரிதும் தீங்கானது, போய் தூங்குங்கள் என பெரியவர்கள் சொன்னாலும் இந்த பதின் வயதினர் அவற்றைக் காதுகொடுத்துக் கேட்பதில்லை. அப்படிப் பட்டவர்களுக்கு ஒரு எச்சரிக்கையாய் வந்திருக்கிறது புதிய ஆராய்ச்சி ஒன்று.
பதின் வயதினரை மட்டும் வைத்து நிகழ்த்தப்பட்ட இந்த இந்த ஆய்வின் முடிவு ஒழுங்கான தூக்கம் இல்லாத பதின் வயதினருக்கு உயர் குருதி அழுத்த நோய் வரும் என அதிர்ச்சிச் செய்தியை அறிவித்திருக்கிறது.
ஒழுங்கான தூக்கம் இல்லாதவர்கள் அதிக எடையுடையவர்களாய் மாறும் அபாயம் இருப்பதாக முன்பு ஒரு ஆராய்ச்சி முடிவு வெளியிட்டிருந்தது. இப்போது அதைவிட அச்சுறுத்தல் தரும் இந்த ஆய்வு முடிவு வெளியாகி இருக்கிறது.
உயர் குருதி அழுத்தம் என்பது இதய நோய் உட்பட பல்வேறு பெரிய நோய்கள் வருவதற்கான காரணமாகி விடக் கூடும் என்பதால் இந்த ஆராய்ச்சி மருத்துவ உலகில் முக்கியத்துவம் பெறுகிறது.
முழுக்க முழுக்க பதின் வயதினரின் உடல் நலம் தொடர்பாய் நிகழ்த்தப்பட்ட இந்த சோதனையில் கலந்து கொண்ட அனைவரும் 13 க்கும் 19க்கும் இடைப்பட்ட வயதினர் என்பது குறிப்பிடத் தக்கது. அவர்களில் சுமார் நாற்பது விழுக்காடு பேர் குறைந்த தூக்கம், அல்லது நிம்மதியற்ற தூக்கத்தையே கொண்டிருப்பதாக தெரிய வந்திருப்பது கவலைக்குரியதாகும்.
பல்கலைக்கழக தூக்கம் தொடர்பான ஆராய்ச்சிப் பிரிவு இயக்குனர் சூசன் ரெட்லைன் இது பற்றிக் குறிப்பிடுகையில், இதுவே முழுக்க முழுக்க பதின் வயதினரை வைத்து நிகழ்த்தப்படும் தூக்கம் தொடர்பான முதல் ஆராய்ச்சி என தெரிவித்தார். இதன் முடிவு தூக்கம் தொடர்பான மற்ற ஆராய்ச்சி முடிவுகளை விட அச்சுறுத்தக் கூடியது என அவர் கவலை தெரிவித்தார்.
தற்போதைய வாழ்க்கை முறை பதின் வயதினரை பல்வேறு விதமான கேளிக்கைகளுக்குள் இழுத்துச் சென்று அவர்களுடைய நேரத்தையும், உடலையும் வீணடிக்கிறது. கிடைக்கும் ஓய்வு நேரத்தில் உடலுழைப்பு தேவைப்படும் விளையாட்டுகளில் ஈடுபடுவது இரவில் நல்ல தூக்கத்துக்கு உத்தரவாதம் தரும். அதை விடுத்து வெறுமனே தொலைக்காட்சி எனும் தூக்குக் கயிற்றில் தொங்கினால் வாழ்க்கை நலமிழக்கும், அர்த்தமிழக்கும்.

Leia Mais…

Wednesday 11 January 2012

கருக்கலைப்பு - கலையாத எண்ணங்கள்..

“உங்க பொண்ணு கர்ப்பமாயிருக்கா. இது பதினேழாவது வாரம்” சொன்ன டாக்டரைப் பார்த்து கோபத்துடன் கேட்டாள் தாய் லாக்ராமியோ. “உங்களுக்கென்ன பைத்தியமா, அவ பத்து வயசு குழந்தை”
“ஏம்மா… நான் பைத்தியமில்லை. உங்க பொண்ணு கர்ப்பமாயிருக்கா. ஆகவேண்டியதைப் பாருங்க” ஏக கடுப்பில் சொல்லிவிட்டுக் கிளம்பினார் டாக்டர்.
லாக்ராமியோரா நிலை குலைந்து போய் தரையில் அமர்ந்தாள். அருகில் மகள் புளோரினா. துருதுரு பார்வை, கொழு கொழு கன்னம். கொஞ்சமும் மாறாத தெய்வீக மழலைச் சிரிப்பு. வயிற்று வலி என மருத்துவமனை வந்தவர்கள் இப்படி ஒரு அதிர்ச்சியை கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. 
விசாரித்த போது தான் விஷயம் தெரியவந்தது சிறுமியைக் கொஞ்சிக் கொண்டிருக்கும் மாமன்காரன் வில்லனாகிப் போன கொடுமை. தன் சகோதரனே கொடுமைக்காரனாகி விட்டானே எனும் அதிர்ச்சி ஒருபுறம். மகளின் துயரம் மறுபுறம் என கலங்கிப் போனாள் தாய். எப்படியாவது உடனடியாக கர்ப்பத்தைக் கலைக்க வேண்டும் என முயன்ற போது தான் வந்தது அடுத்த அதிர்ச்சி.
அவர்கள் வசித்து வந்த ரொமானியா வில் 14 வாரங்கள் தாண்டிவிட்டால் கருக்கலைப்பு செய்வது சட்டவிரோதம்! என்ன செய்வது ? எப்படியாவது கருவைக் கலைத்தேயாக வேண்டும் என்பதில் தாய்க்கும் மகளுக்கும் மாற்றுக் கருத்து இருக்கவில்லை. கடைசியில் விஷயம் பத்திரிகைக்கு வர, உதவிக்கு வந்தாள் ரோக்சானா எனும் பெண்மணி.
சில பல இன்னல்களுக்குப் பின், ரொமானியாவிலிருந்து லண்டனுக்குப் பறந்து, லண்டனிலுள்ள கிங்ஸ் மருத்துவமனையில் சிறுமியின் கரு கலைக்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சி உலகம் முழுவதும் பல்வேறுவிதமான விவாதங்களை உருவாக்கியது. கருக்கலைப்பு சரியா தவறா ? ஒட்டு மொத்தமாக இதைத் தடுப்பது நியாயமா ? எனும் விவாதங்களுக்கு எண்ணை ஊற்றியது இந்த நிகழ்ச்சி.
கருக்கலைப்பு என்றாலே ஏதோ தகாத உறவினால் உருவான குழந்தையைக் கலைக்கிறார்கள் எனும் எண்ணம் தான் பெருமாலானோருக்கு. உண்மையில் கருக்கலைப்புக்கு எக்கச்சக்க காரணங்கள் இருக்கின்றன. முதலில் வருவது மருத்துவக் காரணங்கள். கருவிலிருக்கும் குழந்தைக்கு உடல் ஊனம் ஏதேனும் இருக்கிறதா என்பதை மூன்றாவது மாதத்தில் எடுக்கும் ஸ்கேனே புட்டுப் புட்டு வைத்து விடுகிறது. குழந்தை பிறந்த பின் நிரந்தர ஊனமாய் இருந்தால் எந்த அன்னையால் தான் தாங்கிக் கொள்ள முடியும். இத்தகைய சிக்கல்களைக் கண்டறிவது தானே ஸ்கேனின் முக்கிய நோக்கமே !
சிலருக்கு பிரசவம் நடந்தால் உயிருக்கே ஆபத்து எனும் மருத்துவ நிலை இருக்கும்.  சிலர் பாலியல் பலாத்காரத்தின் விளைவாகக் கர்ப்பமடைந்திருப்பார்கள். இவர்களின் நிலைதான் என்ன ? இவையெல்லாம் எழுப்பப்படும் கேள்விகளில் சில.
பல நாடுகள் இத்தகைய பிரச்சினைகளை ஆழமாய் அலசி ஆராய்ந்து கருக்கலைப்புக்கான சட்டங்களை வகுத்திருக்கின்றன. பிரேசில் நாட்டில் கருக்கலைப்பு சட்டவிரோதம். ஆனால் பாலியல் வன்முறையினாலோ, பெண்ணின் உயிருக்கு ஆபத்து இருந்தாலோ கருக்கலைப்பு செய்து கொள்ள சட்டம் அனுமதிக்கிறது.
பெரும்பாலும் மதங்களின் அடிப்படையிலான அரசுகளே கருக்கலைப்புகளுக்கு எதிராக குரல் கொடுக்கும் நிலையில் இருக்கின்றன. மத நம்பிக்கைகளை மறுதலிக்காமல் இருப்பதில் தவறில்லை. அதே நேரம் அரசுகள் மக்களைக் காப்பதிலும் கவனம் செலுத்தியாக வேண்டுமல்லவா ?
பொதுமக்களைப் பொறுத்தவரை கருக்கலைப்புக்கு ஆதரவும் எதிர்ப்பும் கலந்தே இருக்கிறது. ஆனால் தவிர்க்க முடியாத காரணங்களுக்காக கருக்கலைப்பு செய்து கொள்வதை பெரும்பாலான மக்கள் ஆதரிக்கின்றனர்.
2005ம் ஆண்டு பத்து ஐரோப்பிய நாடுகளில் விரிவான கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது. “பெண்கள் கருக்கலைப்பு செய்ய முடிவெடுக்கலாமா” என்பது தான் கேள்வி. அதிகபட்ச மாக கிரீச் ரிப்பப்ளிக் பிரதேசத்தில் 81 சதவீதமும், குறைந்த பட்சமாக போலந்து நாட்டில் 47 சதவீதம் மக்களும் வாக்களித்தனர்.
அமெரிக்காவில் வாழும் கனடா மக்களிடையே டிசம்பர் 2001ல் ஒரு கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது. 86 சதவீதம் பேர் தகுந்த காரணங்களுக்காக கருக்கலைப்பு செய்யும் முடிவெடுக்கும் உரிமையை பெண்களிடம் விட்டு விடவேண்டும் என கருத்து சொன்னார்கள். சமீபத்தில் வெளியான இன்னொரு கருத்துக் கணிப்பும் கருக்கலைப்புக்கு ஆதரவாகவே இருந்தது. பெண்கள் கருக்கலைப்பு செய்யவே கூடாது என குரல் கொடுத்தவர்கள் வெறும் 16 விழுக்காடு மட்டுமே.
வட அமெரிக்கா மட்டுமன்றி, தென் அமெரிக்காவில் அர்ஜெண்டீனாவில் 2003ல் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பிலும் 77 சதவீதம் பேர் கருக்கலைப்பை எதிர்க்கவில்லை. தவிர்க்க முடியாத சூழ்நிலைகளில் பெண்களுக்கு கருக்கலைப்பு செய்ய உரிமை வழங்கப்படவேண்டும் என்றே வலியுறுத்தினர்.
இப்படி கருத்துக் கணிப்புகள் ஆதரவு நிலைப்பாடைக் காட்டினாலும் பல நாடுகள் அதையெல்லாம் சட்டை செய்வதில்லை. அபார்ஷனை மருந்துக்குக் கூட ஒத்துக் கொள்ளாத நாடுகள் பல இருக்கின்றன . சிலி, எல்சால்வடார், மெல்ட்டா, வாடிகன் சிட்டி மற்றும் நிக்குராக்வா போன்றவையே அவற்றில் சில.
நிக்குராக்வா நாட்டின் நிலமை படு மோசம். மருத்துவக் காரணங்களுக்காக கருக்கலைப்பு செய்து கொள்ளலாம் எனும் சட்டம் 2006 வரை இருந்தது. மூன்று டாக்டர்கள் சான்றளிக்க வேண்டும் என்பது மட்டுமே சொல்லப்பட்டிருந்த நிபந்தனை. 2006 நவம்பர் மாதம் அதைத் திருத்தி, கருக்கலைப்பு கூடவே கூடாது என எழுதினார்கள். 
இதன் விளைவு மகா கொடுமையானது. 11 மாதங்களில் சுமார் 80க்கும் மேற்பட்ட பெண்கள் பிரசவத்தில் இறந்து போனார்கள். அதிர்ந்து போன மனித உரிமைகள் சங்கம் இப்போது இந்தப் பிரச்சினையை கையிலெடுத்துக் கொண்டு களத்தில் குதித்திருக்கிறது.
எகிப்து, ஈரான், ஈராக், ஜப்பான், குவைத், சவுதி அரேபியா, துருக்கி, எமிரேட்ஸ் உட்பட பல நாடுகளில் கருக்கலைப்புக்குத் தடையில்லை. ஆனால் கருக்கலைப்பு கணவனின் அனுமதியுடன் தான் நடக்க வேண்டும் என்கிறது சட்டம். இதைப் பெரும்பாலான பெண்கள் அமைப்புகள் எதிர்க்கின்றன. 
கொலம்பியாவிலும் கருக்கலைப்பு சட்ட விரோதம். அங்கே ஊறியிருக்கும் மத நம்பிக்கைகளின் காரணமாக மக்களிடையேயும் அதே சிந்தனையே. எக்காரணம் கொண்டும் கருக்கலைப்பு செய்யக் கூடாது எனும் சட்டத்தை 66 சதவீதம் பேர் ஆதரிக்கின்றனர்.
அயர்லாந்து நாட்டிலுள்ள கருக்கலைப்பு சட்டம் ஒரே ஒரு நிபந்தனையைக் கொண்டிருக்கிறது. அதாவது பெண்ணின் உயிருக்கு ஆபத்து என்றால் மட்டுமே கருக்கலைப்பு. இல்லையேல் கூடாது. குழந்தை ஊனமாய்ப் பிறக்கும், பலாத்காரம் செய்யப்பட்டேன், தவறு செய்துவிட்டேன் என்றெல்லாம் காரணம் சொல்ல முடியாது.
இந்தியாவைப் பொறுத்தவரை இந்த விஷயத்தில் அதிக சிக்கல் இல்லை. 1971 முதல் கருக்கலைப்பு சட்டரீதியாக ஒத்துக் கொள்ளப்பட்டது. மக்கள் தொகையைக் கட்டுப்படுத்த வேண்டும் என்பதற்காக இது சட்டமாக்கப்பட்டது. இந்தியாவில் ஆண்டுக்கு சராசரியாய் பதினோரு மில்லியன் கருக்கலைப்புகள் நடக்கின்றனவாம் ! 4 மில்லியன் கருக்கலைப்புகள் மறைமுகமாகச் செய்யப்படுகிறதாம். என்.சி.எம்.ஏ (National Consensus for Medical Abortion in India) சொல்கிறது.
கருக்கலைப்பை ஒத்துக் கொள்ளாத நாடுகள், இது மக்களை ஒழுங்கு படுத்தும் முயற்சி என்கின்றன. திருமணமாகாத பெண்களுக்குத் தான் 60 சதவீதம் கருக்கலைப்பு நடக்கிறது என புள்ளி விவரங்களையும் நீட்டுகின்றன. கருக்கலைப்பை அனுமதிக்கும் நாடுகளோ இது பெண்களின் உரிமை, மருத்துவத் தேவை, சமூக கடமை என எதிர் விவாதங்களை முன் வைக்கின்றன. 
கருக்கலைப்பு என்பது விளையாட்டுச் சமாச்சாரமல்ல. இது தவறுகளுக்கான அனுமதிச் சீட்டும் அல்ல. ஆனால் தவிர்க்க இயலா சூழலில் கூட அது மறுக்கப்படுவது சரியா என்பது தான் நம்மிடையே எழும் கேள்வி.
நன்றி : பெண்ணே நீ

Leia Mais…